செய்திகள்
பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

சம்பா பருவ பயிர்களுக்கான காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கும் பணி- முதல்வர் துவக்கி வைத்தார்

Published On 2021-10-18 08:06 GMT   |   Update On 2021-10-18 09:41 GMT
பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பதிவு செய்து தங்கள் பயிரைக் காப்பீடு செய்து கொள்ளுமாறு முதல்வர் கேட்டுக்கொண்டார்.
சென்னை:

சம்பா பருவ பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகையான 1597.18 கோடி ரூபாய் சுமார் 6 இலட்சம் விவசாயிகளுக்கு வழங்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

2020-2021ஆம் ஆண்டில், பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் குறுவை, சம்பா மற்றும் குளிர்காலப் பருவப் பயிர்கள் 42.75 லட்சம் ஏக்கர் பரப்பளவு பயிர்க் காப்பீடு செய்வதற்காக, 25.76 லட்சம் விவசாயிகள் பதிவு செய்தனர். குறுவை (காரீப்) பருவத்துக்கான இழப்பீட்டுத் தொகையாக ரூ.133.07 கோடி, 2,02,335 விவசாயிகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது.

முதல்வர் தலைமையிலான அரசால், நிதி நெருக்கடியான சூழ்நிலையிலும் தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, 2021-22ஆம் ஆண்டில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்துவதற்காக ரூ.2,327 கோடி நிதியை, 2021-22 ஆம் வேளாண் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில், 2020-2021ஆம் ஆண்டு சம்பா பருவப் பயிர்களுக்கான தமிழக அரசின் பயிர்க் காப்பீட்டுக் கட்டண மானியமாக ரூ.1,553.15 கோடி, காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.



இதன் காரணமாக, 2020-2021ஆம் ஆண்டு சம்பா பருவப் பயிர்களுக்கு (சம்பா நெற்பயிர் உட்பட) இழப்பீட்டுத் தொகையான ரூ.1,597.18 கோடியில், இப்கோ-டோக்யோ பொது காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் ரூ.1,089.53 கோடியும், இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் ரூ.507.65 கோடியும், சுமார் 6 லட்சம் விவசாயிகளுக்குத் தற்போது ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கான இந்த இழப்பீட்டுத் தொகையை பாதிக்கப்பட்ட 6 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கிடும் விதமாக முதல்வர் இன்று 10 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்கி தொடங்கி வைத்தார்.

மேலும், 2021-2022ஆம் ஆண்டு சம்பா பருவப் பயிர்களைக் காப்பீடு செய்ய 26.08.2021 அன்று தமிழக அரசால் 16.08.2021ஆம் நாளிட்ட வேளாண்மை - உழவர் நலத்துறை அரசாணை (டி) எண்.141-ல் ஆணை வெளியிடப்பட்டு, விவசாயிகள் சம்பா பருவப் பயிர்களுக்கான காப்பீட்டுக் கட்டணத்தை (பிரீமியத்தை) செப்டம்பர் 15-ம் தேதி முதல் செலுத்தி வருகின்றனர்.

13.10.2021 வரை, 61871 விவசாயிகளால் 
பயிர்க் காப்பீடு
 செய்யப் பதிவு செய்யப்பட்டு, 67,556 ஏக்கர் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளின் நலனுக்காகச் செயல்படுத்தப்பட்டு வரும் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பதிவு செய்து தங்கள் பயிரைக் காப்பீடு செய்து கொள்ளுமாறு முதல்வர் விவசாயிகளைக் கேட்டுக்கொண்டார்.

இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News