செய்திகள்
அரசாணி சாகுபடியில் மகசூல் பாதிப்பு-விதை ஆய்வாளர் குழுவினர் ஆய்வு
பாதிப்பு இதர விளைநிலங்களில் உள்ளது தெரியவந்தால் விதை வாங்கிய பில்லுடன் விதை ஆய்வாளரிடம் விவசாயிகள் புகார் கொடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மடத்துக்குளம்:
மடத்துக்குளம் தாலுகா மெட்ராத்தி, துங்காவி, மலையாண்டிபட்டிணம், செங்கன்டிபுதூர், வேடபட்டி, குமாரமங்கலம் உள்ளிட்ட புதிய ஆயக்கட்டு பகுதிகளில் சில மாதங்களுக்கு முன்பு அரசாணி விதைகள் நடவு செய்யப்பட்டன.
இந்த விதைகள் மகசூல் கொடுக்கவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்ததோடு விதை விற்பனை செய்த தனியார் நிறுவனத்திடம் நிவாரணம் பெற்றுத்தர வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்ட தோட்டக்கலை அலுவலர்கள், விதை ஆய்வாளர் குழுவுடன் சம்பந்தப்பட்ட விளை நிலங்களில் ஆய்வுசெய்ததோடு விவசாயிகளிடம் தகவல்களை கேட்டறிந்தனர். இதுகுறித்து தோட்டக்கலைத்துறையினர் கூறியதாவது:-
மஞ்சள் வைரஸ் நோய் தாக்குதல் காரணமாக மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் தாக்குதல், அதன் அறிகுறிகள், வைரசை தடுப்பது குறித்து ஆலோசனை கொடுக்கப்பட்டுள்ளது.
வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான செடிகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அதை பரிசோதனைக்கு அனுப்பி தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த பாதிப்பு இதர விளைநிலங்களில் உள்ளது தெரியவந்தால் விதை வாங்கிய பில்லுடன் விதை ஆய்வாளரிடம் விவசாயிகள் புகார் கொடுக்கலாம்.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.