செய்திகள்
திருட்டு

மோகனூர் அருகே கால்நடை டாக்டர் மனைவியிடம் 10 பவுன் தாலிக்கொடி திருட்டு

Published On 2021-10-16 11:55 GMT   |   Update On 2021-10-16 11:55 GMT
மோகனூர் அருகே கால்நடை டாக்டர் மனைவியிடம் 10 பவுன் தாலிக்கொடி திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோகனூர்:

மோகனூர் அருகே ஆரியூர் ஊராட்சிக்குட்பட்ட சிங்கயகவுண்டன் புதூரை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் செவ்வந்திப்பட்டியில் அரசு கால்நடை டாக்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்கள் குடும்பத்துடன் நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியே தூங்கி கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை கிருஷ்ணவேணி எழுந்தபோது, அவரது கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தாலிக்கொடி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீடு மற்றும் அருகில் உள்ள பகுதியில் தேடியும் நகை கிடைக்கவில்லை. வீட்டில் அனைவரும் தூங்கியதை அறிந்த மர்மநபர்கள் கிருஷ்ணவேணி கழுத்தில் அணிந்திருந்த தாலிக்கொடியை நைசாக திருடி சென்றனர். இதுகுறித்து கிருஷ்ணவேணி மோகனூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் கைரேகை நிபுணர்களும் அங்கு சென்று வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். இதுஒருபுறம் இருக்க அதே இரவு ஆரியூர் ஊராட்சிக்குட்பட்ட ஆமப்பாறை பகுதியில் உள்ள 2 வீடுகளில் திருட்டு முயற்சி நடந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News