செய்திகள்
மின்சாரம் தாக்கி பலி

ராசிபுரம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

Published On 2021-10-16 11:45 GMT   |   Update On 2021-10-16 11:45 GMT
ராசிபுரம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராசிபுரம்:

ராசிபுரத்தில் பேக்கரியில் வேலை செய்தபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கட்டனாச்சம்பட்டி கிராமம் மட்டிக்காரர் தோட்டத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவருடைய மகன் அசோக்குமார் (வயது 37). இவருடைய மனைவி மலர்க்கொடி (32). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் ராசிபுரம் டவுன் எல்லை மாரியம்மன் கோவில் அருகே உள்ள பேக்கரி கடையில் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஆயுத பூஜையையொட்டி கடையில் இருந்த பப்ஸ் ஓவனை அசோக்குமார் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அசோக்குமாரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ராசிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து அவருடைய மனைவி மலர்க்கொடி ராசிபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மின்சாரம் தாக்கி பேக்கரி ஊழியர் பலியான சம்பவம் கட்டனாச்சம்பட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News