செய்திகள்
உடுமலை கோவிலில் ராமர் ஆலய உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடு
உற்சவ மூர்த்திகளுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு திருமஞ்சனம், பூஜைகள் செய்யப்பட்டு நவம்பர் 8-ந்தேதி ராமேஸ்வரம் கோவிலுக்கு செல்கிறது.
உடுமலை:
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீ ராமர் ஆலயத்திற்கு வழங்கி அங்கு உற்சவ மூர்த்திகளாக பூஜை செய்யப்படுவதற்காக கும்பகோணத்தில் ஸ்ரீ ராமர், ஸ்ரீ லட்சுமணர், ஸ்ரீ சீதா தேவி மற்றும் ஸ்ரீ அனுமர் ஆகியோருக்கு ஐம்பொன் சிலைகள் தயாராகியுள்ளது.
இந்த உற்சவ மூர்த்திகளுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு திருமஞ்சனம், பூஜைகள் செய்யப்பட்டு நவம்பர் 8-ந்தேதி ராமேஸ்வரம் கோவிலுக்கு செல்கிறது. அங்கிருந்து அயோத்தி ஆலயத்திற்கு ரத ஊர்வலமாக கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், கும்பகோணத்திலிருந்து, சென்னை, சமயபுரம், மதுரை, ஸ்ரீரங்கம் மற்றும் வாழப்பாடி பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு உற்சவ மூர்த்திகளுக்கு பால், தயிர், நெய், இளநீர், தேன் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களில் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி - சீதாப்பிராட்டி, திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.