செய்திகள்
முத்தாரம்மன் கோவில் சூரசம்ஹாரம் பக்தர்கள் இன்றி நடந்தது
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இன்றும், நாளையும் சாமி தரிசனத்துக்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
குலசேகரன்பட்டினம்:
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரசித்தி பெற்ற தசரா திருவிழா இந்த ஆண்டு கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி பல்வேறு ஊர்களிலும் விரதம் இருந்த பக்தர்கள் காப்புக்கட்டி, நேர்த்திக்கடனாக பல்வேறு சுவாமிகளின் வேடங்களை அணிந்து, அந்தந்த ஊர்களில் காணிக்கை வசூலித்தனர்.
இந்நிலையில், தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 10-ம் திருநாளான நேற்று இரவில் நடந்தது. இதையொட்டி காலை அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. நள்ளிரவு 12 மணியளவில் கோவில் சிம்மவாகனத்தில் எழுந்தருளி அம்மன் தன்னுடன் போரிட வந்த மகிஷாசூரனை சூலாயுதம் கொண்டு வதம் செய்தார். சூரசம்ஹாரம் முடிந்ததும் அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, 2-வது ஆண்டாகவும் பக்தர்கள் பங்கேற்பின்றி கோவிலின் முன்பாக சூரசம்ஹாரம் எளிமையாக நடைபெற்றது. விழா நிகழ்ச்சிகள் யூ-டியூப் இணையதளத்திலும், உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டன.