கப்பலூரில் சுங்க கட்டணத்தை தவிர்க்க மாற்றுப்பாதையில் வந்த பஸ் மற்றொரு பஸ் மீது மோதியது- 2 பேர் காயம்
திருமங்கலம்:
சிவகாசியில் இருந்து மாட்டுத்தாவணி செல்லும் அரசு பஸ் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சின் மாதாந்திர சுங்க கட்டணம் முடிவடைந்ததால் சுங்கச்சாவடி ஊழியர்கள் அதை மேற்கொண்டு செல்ல அனுமதிக்க மறுத்தனர்.
இதனால் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும், அரசு பஸ் ஓட்டுனருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பஸ் டிரைவர் வேறுவழியின்றி மீண்டும் பஸ்சை தர்மத்துப்பட்டி வழியாக செல்வதற்காக சர்வீஸ் ரோட்டில் இயக்கினார்.
அப்போது திருமங்கலத்தில் இருந்து பெரியார் பஸ் நிலையத்துக்கு சென்ற அரசு பஸ் கட்டுப்பாட்டை இழந்து இந்த பஸ்சுடன் மோதியது. இதில் முன் புறம் அமர்ந்திருந்த 62 வயது மதிக்கத்தக்க மூதாட்டி, 15 வயது சிறுவன் ஆகியோர் லேசான காயம் அடைந்தனர். 2 பஸ்களும் சர்வீஸ் ரோட்டில் மோதிக் கொண்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சீரமைத்தனர்.