பாளை அரசு ஆஸ்பத்திரியில் கணவரால் வெட்டப்பட்ட பெண் ஊழியர் பலி
நெல்லை:
நெல்லை சீவலப்பேரியை அடுத்த பாலாமடை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிச்சையா (வயது 55), கூலித் தொழிலாளி. இவரது மனைவி மாரியம்மாள் (44).
மாரியம்மாள் நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். அவரை பிச்சையா வேலைக்கு செல்ல வேண்டாம் என கண்டித்ததாகவும், ஆனால் மாரியம்மாள் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து வேலைக்கு சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த பிச்சையா கடந்த 11-ந் தேதி ஆஸ்பத்திரிக்கு அரிவாளுடன் சென்றார். அங்கு ஆஸ்பத்திரி வளாகத்தில் இருந்த மாரியம்மாளுடன் தகராறு செய்தார்.
அப்போது ஆவேசம் அடைந்த அவர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாரியம்மாளின் வயிற்றில் வெட்டினார். இதில் குடல் சரிந்து உயிருக்கு போராடிய அவர் அலறி துடித்தார். சத்தம் கேட்டு ஆஸ்பத்திரியில் இருந்தவர் ஓடி வந்தனர்.
அதற்குள் பிச்சையா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உடனே மாரியம்மாளை மீட்டு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தனர்.
சம்பவ இடத்துக்கு ஐகிரவுண்டு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.இதில் பிச்சையா, மாரியம்மாள் ஆகிய இருவருமே 2-வது திருமணம் செய்தவர்கள் என்பது தெரிய வந்தது.
இந்நிலையில் மாரியம்மாளின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை பிச்சையா வெட்டியதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மாரியம்மாள் சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார்.
இதனால் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.