செய்திகள்
கொலை

அஞ்சுகிராமம் அருகே கள்ளக்காதல் தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை

Published On 2021-10-15 09:38 GMT   |   Update On 2021-10-15 09:38 GMT
அஞ்சுகிராமம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில்:

அஞ்சுகிராமம் அருகே தோப்பூர் ராமனாதிச்சியன்புதூரை சேர்ந்தவர் ரோச் அஜய் ஜான்சன் (வயது 32) மினி டெம்போ டிரைவர்.

குமாரபுரம் தோப்பூரை சேர்ந்தவர் பிரபாகரன் (30). இவர்கள் இருவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவருக்கும் ஒரே பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததால் அடிக்கடி இவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. நேற்று முன்தினம் பிரபாகரனும், ரோச்அஜய் ஜான்சனும் மது அருந்தினர். போதை தலைக்கேறியதும் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் மாலையில் ரோச்அஜய் ஜான்சன் தனது நண்பர் லியோன் பிரபாகரனுடன் குமாரபுரம் தோப்பூர் பகுதிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பிரபாகரன் மற்றும் அவரது நண்பர்கள் கண்ணன் (27) மருங்கூரைச் சேர்ந்த அமல் (28) ஆகிய 3 பேரும் ரோச் அஜய் ஜான்சனை தடுத்து தகராறு செய்தனர். சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றி இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.

இதில், ஆத்திரமடைந்த பிரபாகரன், ரோச் அஜய் ஜான்சனை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். தடுக்க வந்த அவரது நண்பர் லியோன் பிரபாகரனுக்கும் காயம் ஏற்பட்டது. அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த ரோச் அஜய் ஜான்சன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். பிரபாகரன், கண்ணன், அமல் ஆகிய 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த ரோச் அஜய் ஜான்சன், லியோன் பிரபாகரன் இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலனின்றி ரோச் அஜய் ஜான்சன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். லியோன் பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் பிரபாகரன், கண்ணன், அமல் ஆகிய 3 பேர் மீதும் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். இதில் பிரபாகரன் ஏற்கனவே காயம் அடைந்து ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளார். எனவே அவர் சிகிச்சை பெற்று வரும் வார்டின் வெளியே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கண்ணன், அமல் இருவரையும் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. போலீசார் தேடுவதை அறிந்த இருவரும் தலைமறைவாகி விட்டனர். கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News