செய்திகள்
மணிமாறன்

ஒருதலை காதலை தட்டிகேட்ட ஊராட்சி மன்ற தலைவரின் தம்பி குத்தி கொலை

Published On 2021-10-15 05:18 GMT   |   Update On 2021-10-15 05:18 GMT
கொடைக்கானல் அருகே ஊராட்சி மன்ற தலைவரின் தம்பியை குத்தி கொன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

பெரும்பாறை:

கொடைக்கானல் கீழ்மலை பகுதியான பூலத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் பிரகாஷ் மகன் ஆனந்தன். இவரது தம்பி மணிமாறன்(24). இவருக்கு திருமணமாகி ரம்யா என்ற மனைவியும், 10 மாத ஆண்குழந்தையும் உள்ளனர். விவசாய கூலிவேலை பார்த்து வருகிறார். ரம்யாவின் சகோதரி நிலக்கோட்டையில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

இவரை பூலத்தூரை சேர்ந்த சுரேந்தர்(22) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். சுரேந்தர் கோவையில் காய்கறி வியாபாரம் பார்த்து வருகிறார். மாணவியின் செல்போன் எண்ணுக்கு தொடர்ந்து குறுந்தகவல் அனுப்பி வந்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது மாமா மணிமாறனிடம் கூறியுள்ளார்.

பூலத்தூரில் கடந்த 3 நாட்களாக ராமர்கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதற்காக சுரேந்தர் திருவிழாவிற்கு வந்துள்ளார். அவரை பார்த்த மணிமாறன் எதற்காக எனது கொளுந்தியாளுக்கு செல்போனில் குறுந்தகவல் அனுப்புகிறாய் என கேட்டுள்ளார். மேலும் இனிமேல் அவருடன் பேசுவதை நிறுத்தி கொள்ளுமாறும் எச்சரித்துள்ளார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த சுரேந்தர் தான் மறைத்துவைத்திருந்த கத்தியால் மணிமாறனை பல இடங்களில் குத்தினார். இதில் ரத்தவெள்ளத்தில் மணிமாறன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனால் திருவிழாவில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தாண்டிக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பிஓடிய சுரேந்தரை தேடி வருகின்றனர். 

Tags:    

Similar News