செய்திகள்
வான்மதி

ஊராட்சி தேர்தலில் தந்தை தோல்வியால் விரக்தி- கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை

Published On 2021-10-15 04:59 GMT   |   Update On 2021-10-15 04:59 GMT
நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தந்தை தோல்வி அடைந்ததால் விரக்தி அடைந்த கல்லூரி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
விழுப்புரம்:

விழுப்புரம் அருகே மயிலம் யூனியனுக்குட்பட்ட ஆசூர் கிராமத்தை சேர்ந்தவர் சம்பத். இவரது மகள் வான்மதி (வயது22). இவர் ஆலம்பூண்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார்.

இவரது தந்தை சம்பத் தற்போது நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆசூர் ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். தேர்தல் முடிவில் 65 வாக்குகள் வித்தியாசத்தில் சம்பத் தோல்விஅடைந்தார்.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட வான்மதி தந்தைக்கு ‘சாரி டாடி ஐ மிஸ் யூ’ என செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு, வீட்டிலிருந்து மொபட்டை எடுத்துக் கொண்டு சென்றார்.

அதிர்ச்சியடைந்த சம்பத் உறவினர்களுடன் சேர்ந்து பல்வேறு இடங்களில் மகளை தேடினார். அப்போது அவருக்கு சொந்தமான விவசாய கிணற்றின் அருகே மொபட் நிற்பது தெரியவந்தது. சம்பத் உடனே அங்கு சென்று கிணற்றை பார்த்தபோது மகள் பிணமாக மிதந்ததை கண்டு கதறி அழுதார்.

தகவல்அறிந்ததும் திண்டிவனம் தீயணைப்பு நிலைய அலுவலர் கதிர்வேல் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர். கிணற்றில் மிதந்த வான்மதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து வெள்ளிமேடு பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வான்மதி வி‌ஷம் குடித்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
Tags:    

Similar News