செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15 ஆயிரத்து 757 கன அடியாக சரிவு

Published On 2021-10-15 03:23 GMT   |   Update On 2021-10-15 03:23 GMT
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து மிக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
மேட்டூர்:

கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரியில் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீருடன் மழை நீரும் சேர்ந்து தமிழக-கர்நாடக எல்லையை கடந்து ஒகேனக்கலுக்கு வருகிறது.

ஒகேனக்கல்லில் இன்று 17 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது. இதனால் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

ஒகேனக்கலில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று 23 ஆயிரத்து 373 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 15 ஆயிரத்து 757 கன அடியாக சரிந்தது. அணையில் இருந்து காவிரியில் 100 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளது . கால்வாயில் 550 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து மிக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 86.92 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 88.13 அடியாக உயர்ந்தது. இதனால் ஒரே நாளில் ஒரு அடிக்கும் மேல் நீர்மட்டம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.

Tags:    

Similar News