செய்திகள்
வாக்களித்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மகன் துரை

மகன் அரசியலுக்கு வருவதை விரும்பாத வைகோ- காரணம் இதுதான்

Published On 2021-10-09 08:28 GMT   |   Update On 2021-10-09 09:19 GMT
உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டிருப்பது ஈவுஇரக்கமற்ற கொடூரமான கோர படுகொலை என வைகோ விமர்சித்துள்ளார்.
சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டத்தில் இன்று 2-ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தனது சொந்த ஊரான சங்கரன்கோவில் யூனியனுக்குட்பட்ட கலிங்கபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு சென்றார்.

அங்கு பொதுமக்களுடன் வரிசையில் நின்று அவர் தனது வாக்கை செலுத்தினார். அவரது மகன் துரை வைகோவும் உடன் சென்று வாக்களித்தார். பின்னர் வைகோ நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எங்கள் ஊரில் அமைதியாக தேர்தல் நடக்கிறது. எப்பொழுதுமே இப்படித்தான். எங்கள் கிராமமே ஒன்றாக இருக்கிறது.


இந்த தடவை எனக்கு என்ன மகிழ்ச்சி என்றால் எங்கள் ஊர் ஒற்றுமையாக இருக்கிறது. எந்த காலத்திலும் இல்லாத ஒரு ஒற்றுமையை எனது மகன் துரை வையாபுரி ஏற்படுத்தி வைத்திருக்கிறார். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தான் வெற்றி பெறும்.

எனது மகனுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்குவது பற்றி ஒன்றும் முடிவு செய்யவில்லை, அவர் அரசியலுக்கு வருவதில் எனக்கு விருப்பம் இல்லை.

காரணம், நான் 56 ஆண்டுகள் கஷ்டப்பட்டு விட்டேன். 28 வருடம் லட்சக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் காரில் பிரயாணம், ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் நடைபயணம், நூற்றுக்கணக்கான போராட்டங்கள், 5½ வருடம் ஜெயில் என வாழ்க்கையையே ஓரளவு அழித்துக்கொண்டிருக்கிறேன்.

என்னோடு போகட்டும், என் மகனும் கஷ்டப்பட வேண்டாம் என்பதால் அவன் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை. கட்சிக்காரர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி 20-ந் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தெரியும்.

உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டிருப்பது ஈவுஇரக்கமற்ற கொடூரமான கோர படுகொலை.

தலிபான்கள் செய்வதை போல இங்கே செய்திருக்கிறார்கள். இதற்கு மன்னிப்பே கிடையாது. இதற்கு தண்டனையும் இல்லை. நீதிமன்றத்தையும் இந்த கொடூரமான கயவர்கள் மதிக்கவும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News