குலசேகரன்பட்டினம் தசராதிருவிழா - இன்று முதல் 3 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை
உடன்குடி:
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகேயுள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெருந்திருவிழா தமிழகத்தில் முதலிடம் வகிக்கும் தசரா திருவிழாவாகும்.
இந்த திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிறப்பு அபிஷேகம், பூஜைகள், வழிபாடுகள் ஆகியன வழக்கம்போல் கோவிலில் தொடர்ந்து நடந்து வருகின்றன.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் அனைத்து அற நிலையதுறை கோவில்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களுக்கு வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இங்கும் 3 நாட்கள் தொடர்ந்து பக்தர்கள் வழிபாடு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் இன்று குலசேகரப்பட்டினத்தில் கோவில் வளாகம் மற்றும் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
வருகின்ற 11,12, 13,14, ஆகிய தேதிகளில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தசரா திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகமும். கோவில் நிர்வாகமும் செய்து வருகிறது.