செய்திகள்
கோப்புபடம்.

கூலி உயர்வு குறித்து விசைத்தறியாளர்கள் 8 - ந்தேதி ஆலோசனை

Published On 2021-10-06 07:24 GMT   |   Update On 2021-10-06 07:24 GMT
கடந்த 2014 - ல் கடைசியாக கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்பட்டு வந்தது.
பல்லடம்:

பல்லடம் விசைத்தறியாளர்களின் கூலி உயர்வு சம்பந்தமாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து வரும் 8 - ந்தேதிபொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து திருப்பூர்- கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

திருப்பூர் - கோவை மாவட்டத்தில் 2.50  லட்சம் விசைத்தறிகள் மூலம் 5 லட்சம் தொழிலாளர்கள் குடும்பங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வாழ்வாதாரம் பெறுகின்றனர். விசைத்தறி தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. 

போதுமான வேலை வாய்ப்புகள் இருந்தும் கூலிஉயர்வு இல்லாதது, உதிரி பாகங்கள் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு என்று தொடர்ந்த செலவுகளால் விசைத்தறி தொழிலில் லாபம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது .

இந்தநிலையில் கடந்த 2014 - ல் கடைசியாக கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்பட்டு வந்தது. 2017 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் நடந்திருக்க வேண்டிய புதிய கூலி உயர்வு பேச்சுவார்த்தை பல்வேறு காரணங்களால் நடைபெறவில்லை. 

இதனால் விசைத்தறியாளர்கள் கூலிஉயர்வு, உதிரி பாகங்கள் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு என்று பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகினோம். 

விசைத்தறி தொழில்,கூலி உயர்வு பிரச்சினை, தானியங்கி தறி அதிகரிப்பு, வங்கி கடன் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மிகவும் நலிந்து வருகிறது. விசைத்தறி தொழிலை மேம்படுத்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம். 

இந்த நிலையில் ஜவுளி உற்பத்தியாளர்களுடன் கடந்த 2014ல் சோமனூர் ரகத்துக்கு 30 சதவீதமும், பல்லடம் ரகத்துக்கு 27 சதவீதமும் கூலி உயர்வு வழங்குவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. 

இந்த ஒப்பந்தப்படி 2 மாதங்கள் மட்டுமே கூலி உயர்த்தி வழங்கினர். அதன் பின் 2011ம் ஆண்டின் ஒப்பந்த கூலியையே  இன்று வரை வழங்கி வருகின்றனர். ஜவுளி உற்பத்தியாளர்களுடன் கூலி உயர்வு குறித்து இதுவரை 6 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. 

கூலி உயர்வு பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படாமல் காலதாமதம் ஆகி வருவதால்அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசிக்க திருப்பூர். கோவை மாவட்ட விசைத்தறியாளர் சங்கத்தின் பொதுக்குழு வரும் 8 - ந்தேதி  பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம், சின்னம்மன் கோவில் மண்டபத்தில் நடைபெறுகிறது. 

அதில் தற்போதைய நிலவரம் குறித்து விசைத்தறியாளர்களுக்கு விளக்கி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 
Tags:    

Similar News