செய்திகள்
பல்லடம் அருகே இந்து முன்னணி நிர்வாகிக்கு கத்திக்குத்து
பலத்த காயமடைந்த சிவகுருவை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பல்லடம்:
பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் சிவகுரு (வயது 35). இவர் பனியன் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அந்தப்பகுதி இந்துமுன்னணி நிர்வாகியாக உள்ளார்.
இந்து முன்னணி அமைப்பில் தீவிரமாக செயல்படுவதால் அந்தப் பகுதியில் உள்ள சிலருடன் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த சிவகுருவிடம், அங்கு வந்த சிலர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
அதில் ஒருவன், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சிவகுருவின் வயிறு, இடுப்பு கை ஆகிய பகுதியில் குத்தி விட்டு தப்பி சென்று விட்டார். இதனால் பலத்த காயமடைந்த சிவகுருவை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.