செய்திகள்
அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பால் உடுமலை பகுதியில் நிரம்பும் குளங்கள்
திருமூர்த்தி அணையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலாம்பாளையம் குளத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
உடுமலை:
கடந்த ஆண்டு ஜூலை முதல் உடுமலை திருமூர்த்தி அணை மற்றும் அமராவதி அணையின் நீராதாரங்கள் மற்றும் பாசன பரப்புகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இதனால் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக அணைகள், கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் ஓரளவுக்கு நீர் இருப்பு உள்ளது.ஆனால் வெப்பத்தின் தாக்குதலால் கிராமப்புறங்களின் உயிர் நாடியான குளங்கள் வறண்டு விட்டது.
இந்த நிலையில் திருமூர்த்தி அணையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலாம்பாளையம் குளத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் வறண்டு கிடந்த குளத்தில் தண்ணீர் தேங்கி உள்ளதுடன் நிலத்தடி நீர் இருப்பு உயர்ந்து வருகிறது.
அதுமட்டுமின்றி குளத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் நீர்வழித்தடம் மற்றும் குளத்தைச்சுற்றியுள்ள கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் நீர் இருப்பு உயர்வதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.