செய்திகள்
தடுப்பூசி முகாமை மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 4வது கட்டமாக 672 மையங்களில் தடுப்பூசி முகாம்-கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

Published On 2021-10-03 08:28 GMT   |   Update On 2021-10-03 08:30 GMT
குடிமங்கலம் பகுதியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை கலெக்டர் வினீத் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்ற முகாமை மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி  தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 20,77,095 உள்ளனர்.

இதுவரை 15,05,290 நபர்களுக்கு முதல் தவணையும், 3,62,823 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் 5,71,805 நபர்களுக்கு முதல் தவணையும், 57,297 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட வேண்டியுள்ளது.

முதற்கட்டமாக கடந்த மாதம் 12-ந்தேதி நடைபெற்ற முகாமில் 1,23,163 பேர்களும், இரண்டாம்கட்டமாக 19-ந்தேதி நடைபெற்ற முகாமில் 89,379 பேர்களும், மூன்றாம் கட்டமாக 26-ந்தேதி நடைபெற்ற முகாமில் 78,974 பயனடைந்துள்ளனர். மேலும் நான்காம் கட்டமாக இன்று மொத்தம் 81,120 நபர்களுக்கு தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதையடுத்து இன்று 4-ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 631 நிலையான முகாம்களிலும், 41 நடமாடும் முகாம்கள் என 672 மையங்களில் காலை 7 மணி முதல் மாலை7 மணி வரை முகாம்  நடைபெறுகிறது.

அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதாரநிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டசத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், பஞ்சாயத்து அலுவலகங்கள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், டோல்கேட் மற்றும் தனியார் மருத்துவமனைகள் ஆகிய இடங்களில்  தடுப்பூசி மருந்து இலவசமாக  செலுத்தப்பட்டது. 

இப்பணிக்காக பல்வேறு துறைகளை சார்ந்த 2,688பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். குடிமங்கலம் பகுதியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை கலெக்டர் வினீத் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்ற முகாமை மாநகராட்சி கமிஷனர்  கிராந்திகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். காலை முதலே ஏராளமான  பொதுமக்கள் வந்து தடுப்பூசி  செலுத்திக்கொண்டனர்.

தடுப்பூசி செலுத்தாதவர்கள்  சிறப்பு முகாம்களை பயன்படுத்தி கொள்ள வேண்டுமென  சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News