செய்திகள்
கோப்புபடம்

மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை - கிராமமக்கள் புகார்

Published On 2021-10-01 10:00 GMT   |   Update On 2021-10-01 10:00 GMT
பசுமையான மரங்களை வெட்டுவதற்கு தடை இருந்தும் எவ்வித அச்சமின்றி சிலர் சமூக விரோத செயலில் ஈடுபட்டுள்ளனர்.
குடிமங்கலம்:

குடிமங்கலம் ஒன்றியம் கொண்டம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராமம் வசவநாயக்கன்பட்டி. இக்கிராமத்துக்கு பூளவாடி பிரிவிலிருந்து பிரிந்து செல்லும் கிராம இணைப்பு சாலை உள்ளது.

இந்த சாலையில் சில ஆண்டுகளுக்கு முன் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. மரக்கன்றுகள் பராமரிப்புக்கு தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிதியில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுதல் உள்ளிட்ட பணிகளுக்கு தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவ்வாறு பல ஆண்டுகள் பராமரித்து செழித்து வளர்ந்த மரங்களை மர்மநபர்கள் வெட்டிச் சாய்த்துள்ளனர். 

இதனால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு மக்கள் அனுப்பியுள்ள மனுவில், மத்திய, மாநில அரசு திட்டத்தின் கீழ் பராமரிக்கப்பட்ட மரங்களை வெட்டிய நபர்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். 

பசுமையான மரங்களை, வெட்டுவதற்கு தடை இருந்தும், எவ்வித அச்சமின்றி இந்த சமூக விரோத செயலில், ஈடுபட்டுள்ளனர். எனவே வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை சார்பில் அப்பகுதியில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெட்டப்பட்ட மரங்களுக்கு மாற்றாக உடனடியாக மரக்கன்றுகள் நடவும் உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News