செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9 ஆயிரம் கன அடியாக சரிவு

Published On 2021-09-30 04:38 GMT   |   Update On 2021-09-30 04:38 GMT
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது.
மேட்டூர்:

கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையை கடந்து ஒகேனக்கலை வந்தடைகிறது.

ஒகேனக்கல்லில் தற்போது 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 10 ஆயிரத்து 164 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 9 ஆயிரத்து 7 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் விநாடிக்கு 12 ஆயிரம் கன அடியும், கால்வாயில் 800 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று 73.44 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 73.06 அடியாக உள்ளது.
Tags:    

Similar News