செய்திகள்
சத்தியமூர்த்தி-கொலையுண்ட திவ்யா

மனைவியை எரித்து கொன்ற வாலிபர் சென்னை நர்சிங் மாணவியுடன் ஓட்டம்

Published On 2021-09-28 08:53 GMT   |   Update On 2021-09-28 10:03 GMT
திருப்பத்தூரில் மனைவிக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு அதிகாரி ஒருவரின் 20 வயது மகள் போரூரை அடுத்த அய்யப்பந்தாங்கலில் உள்ள பிரபல தனியார் மருத்துவ கல்லூரியில் தங்கி நர்சிங் படித்து வந்தார்.

இந்த நிலையில் மாணவி திடீரென மாயமானார். அவரது செல்போனும் “சுவிட்ச் ஆப்” செய்யப்பட்டு உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அரசு அதிகாரி, தனது மகளை கண்டுபிடித்து தருமாறு போரூர் போலீசில் இன்று காலை புகார் அளித்தார்.

இதுகுறித்து உதவி கமி‌ஷனர் பழனி, இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர். இதில் திருப்பத்தூரில் மனைவியை எரித்து கொன்று விட்டு தலைமறைவாக உள்ள வாலிபர் சத்தியமூர்த்தியுடன், மாணவி மாயமாகி இருப்பது தெரிந்தது. மேலும் போலீசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அதன் விபரம் வருமாறு:-

திருப்பத்தூரில் ஓட்டுநர் பயிற்சி பள்ளி நடத்தி வந்த சத்தியமூர்த்தி (30) என்பவர் தனது மனைவி திவ்யாவை கடந்த 25-ந் தேதி பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்து கொலை செய்து உள்ளார். பின்னர் அவர் தனது 3 வயது மகள் வர்ஷினிஸ்ரீயுடன் தப்பி ஓடிவிட்டார்.

அப்போது சத்தியமூர்த்தி ஒரு வீடியோ பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் “எனக்கு இரண்டு கிட்னியும் செயல் இழந்து விட்டதால் இனி எங்களால் சேர்ந்து வாழ இயலாது. என் மனைவியை பிரிந்து செல்ல மனமில்லாததால் அவரை கொலை செய்துவிட்டு நானும் தற்கொலை செய்து கொள்ள போகிறேன்” என்று பேசி இருந்தார்.

குழந்தையுடன் தலைமறைவான சத்தியமூர்த்தியை பிடிக்க திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக மாணவியுடன், கொலையாளி சத்தியமூர்த்தி தலைமறைவாகி இருப்பது தெரியவந்துள்ளது.

மாணவி தங்கி இருந்த கல்லூரி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சத்தியமூர்த்தியின் காரை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர். மாயமான நர்சிங் மாணவி, எரித்து கொலை செய்யப்பட்ட திவ்யாவின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே சத்தியமூர்த்தி மனைவியை திட்டமிட்டு கொலை செய்துவிட்டு தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரது 3 வயது மகள் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. இதுபற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags:    

Similar News