செய்திகள்
பட்டா இடம் வழங்காததால் அதிகாரிகளுடன் பெண்கள் கடும் வாக்குவாதம் - கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
அரசு கொடுத்த நில பட்டா இருப்பதால் மீண்டும் இலவச பட்டாகோரி விண்ணப்பம் செய்தால் அதை ஏற்ப மறுப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது குமரலிங்கம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட பட்டாக்களுடன் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
அவர்கள் நான்கு ஆண்டுகளாகியும் எங்களுக்கு இடம் தரவில்லை. பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அங்கிருந்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது:
நாங்கள் கொமரலிங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எங்களுக்கு 2017-ம் வருடம் இலவச பட்டா வழங்கப்பட்டது. இதுவரைக்கும் இடம் எங்களுக்கு வழங்கப்படவில்லை.
இது சம்மந்தமாக முயற்சி செய்தும் எந்த அதிகாரியும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் தினக் கூலி வேலைக்கு சென்று வருகிறோம்.
2 (இரண்டு வருடங்கள்) வருடங்களாக கொரோனா காலகட்டத்தில் மிகவும் கஷ்டப்பட்டுவிட்டோம். வீட்டுவாடகை ரூ.4.000 ஆயிரம் மற்றும் ரூ.5.000 ஆயிரம் என்றுசெலுத்தி வருகிறோம்.
ரேஷன் கடையில் கிடைத்த பொருட்களை சமைத்து சாப்பிட்டு நாங்கள் மிகவும் கஷ்டத்துடன் குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். அன்றைய தேதியில் அரசு கொடுத்த நிலத்தில் குடிசைப்போட முயற்சித்த போது எங்களிடம் தகராறு செய்து குடிசைகளை பிரித்து விட்டனர்.
எங்களுக்கு அரசு கொடுத்த நில பட்டா இருப்பதால், மீண்டும் இலவச பட்டாகோரி விண்ணப்பம் செய்தால் அதையும் ஏற்க மாட்டேன் என்கிறார்கள்.
நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டுள்ளோம். எங்களுக்கு பட்டாவுக்குரிய இடத்தைக்காட்டி நாங்கள் நிம்மதியுடன் குழந்தைகளுடன் வாழ வழி செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.