செய்திகள்
அமராவதி உபரிநீரை உப்பாறு அணையில் தேக்க 25 கி.மீ., குழாய் பதிக்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டும், விவசாயிகளின் நகைகள் திருப்பி வழங்கப்படாமல் இருக்கின்றன என விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கலெக்டர் வினீத் தலைமை வகித்தார். தாராபுரம் சப்-கலெக்டர் ஆனந்த்மோகன், வேளாண் இணை இயக்குனர் மனோகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் காளிமுத்து பேசுகையில், அமராவதியில் இருந்து வீணாகும் உபரி நீரை உப்பாறு அணையில் தேக்க 25 கி.மீ., தூரம் குழாய் பதிக்க வேண்டும். பி.ஏ.பி., தண்ணீரை நார் தொழிற்சாலைகள் தேக்கி வைத்து பயன்படுத்துவதால் கடைமடைக்கு தண்ணீர் கிடைப்பதில்லை.சூரியநல்லூரில் மீண்டும் மருத்துவ கழிவு ஆலை இயங்க அனுமதிக்க கூடாது.
பி.ஏ.பி., பகிர்மான குழு தலைவர் கோபால்பேசுகையில், கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டும், விவசாயிகளின் நகைகள் திருப்பி வழங்கப்படாமல் இருக்கின்றன. இந்தாண்டு பயிர்க்கடன் பெற முடியாத சூழல் உள்ளது.மாவட்டத்தில், யூரியா தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
உரக்கடைகளில் யூரியாவுடன் வேறு ஏதாவது உரம் வாங்க வேண்டுமென கட்டாயப்படுத்துகின்றனர். கடந்த ஆட்சியில் மும்முனை மின்சாரம் வழங்கப்படுமென அரசாணை வெளியிட்டும், எவ்வித பணியும் நடக்கவில்லை என்றனர். இதேப்போல் பல்வேறு விவசாயிகள் கோரிக்கைகள் குறித்து பேசினர்.