செய்திகள்
திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வங்கதேச தொழிலாளர்களை கணக்கெடுக்கும் பணி தீவிரம்
கடந்த ஆகஸ்டு மாதம் 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த மாதம் இதுவரை 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் போலி ஆவணங்களுடன் வங்கதேச நாட்டை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் பணியாற்றி வருவதாக புகார்கள் வந்ததையடுத்து மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வங்கதேச தொழிலாளர்கள் பலரை கைது செய்தனர்.
கடந்த ஆகஸ்டு மாதம் 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த மாதம் இதுவரை 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து போலீசார் பனியன் நிறுவனங்களில் ஆய்வு நடத்தி வருகின்றனர். வங்கதேசத்தின் முக்கிய தொழில்களில் ஒன்று பின்னலாடை உற்பத்தி யாகும்.
உலக அளவில் பின்னலாடை உற்பத்தியில் இந்தியாவுக்கு போட்டி நாடாக வங்கதேசம் உள்ளது. பின்னலாடை உற்பத்தியில் அனுபவம் வாய்ந்த வங்கதேச தையல் கலைஞர்கள் அதிக ஊதியத்துக்காக திருப்பூர் நோக்கி வருகின்றனர்.
வங்கதேசத்தில் இருந்து கொல்கத்தா வரும் அவர்கள் அங்குள்ள கும்பல் தயாரித்து கொடுக்கும் போலி ஆதார் அட்டை,விசா உள்ளிட்ட ஆவணங்களை பெற்று கொண்டு ரெயில் மூலம் திருப்பூர் வருகின்றனர். அவ்வப்போது போலீசார் நடத்தும் சோதனையில் அவர்கள் சிக்கி விடுகின்றனர். இதுகுறித்து திருப்பூர் மாவட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
வெளிமாநிலங்களில் இருந்து வந்து திருப்பூரில் பணியாற்றி வரும் வங்க தொழிலாளர்கள் தொடர்பாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. எனினும் வங்கதேசத்தில் இருந்து வரும் தொழிலாளர்கள் மேற்கு வங்க மாநிலத்தில் வசிப்பது போல போலி முகவரியில் ஆதார் அட்டைகளை பெற்றுள்ளனர்.
அனைத்து தொழிலாளர்களின் ஆதார் அட்டைகளை பரிசோதனை செய்து உறுதி செய்வதும், அவர்களது வங்கி கணக்கு எண்ணை சரிபார்ப்பதும் இயலாத காரியமாகும். எனவே ஒவ்வொருதொழில் நிறுவனமும் வெளிமாநில தொழிலாளர்களை பணிக்கு எடுப்பதற்கு முன்பாக ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்.
இதில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.