செய்திகள்
பள்ளிபாளையம் அருகே தடுப்பு சுவரில் கார் மோதி விவசாயி பலி
பள்ளிபாளையம் அருகே தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிபாளையம்:
சேலம் மாவட்டம் சங்ககிரி ஆர்.எஸ். பகுதியை சேர்ந்தவர் அர்த்தநாரீஸ்வரன் (வயது 55). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது காரில், சங்ககிரியில் இருந்து பள்ளிபாளையம் வழியாக ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது பள்ளிபாளையம் அருகே வந்தபோது, அங்குள்ள தனியார் மருத்துவமனை அருகே நடுரோட்டில் இருந்த தடுப்பு சுவரில் எதிர்பாராதவிதமாக கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அர்த்தநாரீஸ்வரன் மயக்கம் அடைந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அர்த்தநாரீஸ்வரனை மீட்டு பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து அவருடைய தம்பி சுந்தரம் பள்ளிபாளையம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனியப்பன் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.