செய்திகள்
திருப்பூர் ஜவுளிக்கடையில் திபுதிபுவென புகுந்து ஆடைகளை திருடிச் சென்ற பெண்கள்
கடையில் இருந்த சட்டைகள், டீசர்ட்டுகள் உள்ளிட்ட ஆடைகளை பண்டல் பண்டல்களாக எடுத்து ஒவ்வொருவராக அங்கிருந்து வெளியேறினர்.
திருப்பூர்;
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே ஜவுளிக்கடை உள்ளது. சம்பவத்தன்று கைக்குழந்தைகளுடன் 6 பெண்கள் கடைக்குள் திபுதிபுவென புகுந்தனர்.
அப்போது கடையில் ஒரே ஒரு ஊழியர் மட்டும் பணியில் இருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட அந்த பெண்கள் சேலை, சட்டைகள் வாங்குவது போல் நடித்து ஊழியரின் கவனத்தை திசை திருப்பினர்.
பின்னர் அங்கிருந்த சட்டைகள், டீசர்ட்டுகள் உள்ளிட்ட ஆடைகளை பண்டல் பண்டல்களாக எடுத்து ஒவ்வொருவராக அங்கிருந்து வெளியேறினர். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட ஊழியர் தடுக்க முயல்வதற்குள் அந்த பெண்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி.கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை பார்வையிட்டபோது கைக்குழந்தைகளுடன் கடைக்குள் புகுந்த பெண்கள் ஆடைகளை திருடி சென்றது பதிவாகியுள்ளது.
அந்த பெண்களின் உருவத்தை வைத்து அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பெண்கள் திருடி செல்லும் சி.சி.டி.வி.காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.