செய்திகள்
லஞ்சம் கேட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஊராட்சி அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி வாலிபர் - உடுமலையில் பரபரப்பு
சம்பவ இடத்திற்கு வட்டார வளர்ச்சிதுறை அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் வட பூதனம் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி வாலிபர் நாகராஜ். இவர் அவரது வீட்டிற்கு குடிநீர் இணைப்பு பெறுவதற்காக உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அணுகி விண்ணப்பம் அளித்தார்.
அப்போது அங்கிருந்த ஊழியர்கள் சிலர் குடிநீர் இணைப்புக்கு ரூ.10ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
லஞ்சம் கொடுக்க விரும்பாத நாகராஜ் திடீரென பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை அங்கு நின்ற பொதுமக்கள், ஊழியர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
உடனே அவர் மீது தண்ணீரை ஊற்றி தீக்குளிப்பு முயற்சியை தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவத்தால் ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வட்டார வளர்ச்சிதுறை அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து நாகராஜ் அங்கிருந்து சென்றார்.