தூத்துக்குடியில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்- வாலிபர் கைது
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து மஞ்சள், கஞ்சா உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வெளி நாடுகளுக்கு கடத்தப்படுவது தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணியில் இருந்து ரேசன் அரிசிகள் கேரளாவிற்கு கடத்தி செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து தாளமுத்துநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்ட போது அங்குள்ள ஒரு குடோனில் இருந்து ஒரு கும்பல் ரேஷன் அரிசி மூட்டையை மினி லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓடி விட்டனர். அதில் ஒருவரை மட்டும் போலீசார் விரட்டி சென்று பிடித்தனர்.
விசாரணையில் அவர் சிலுவைபட்டி கணபதிநகரை சேர்ந்த தமிழ்மணி (வயது 34) என்பதும் அவர்கள் கேரளாவிற்கு 7 டன் ரேஷன் அரிசியை கடத்த முயன்றதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.