செய்திகள்
கோப்புபடம்

வழிகாட்டுதல் இல்லாமல் திணறும் பண்ணை மகளிர் குழுவினர்

Published On 2021-09-19 07:25 GMT   |   Update On 2021-09-19 07:25 GMT
பண்ணை மகளிர் மேம்பாட்டு குழுவினருக்கு முதற்கட்டமாக வங்கிக்கணக்கு தொடங்கியதும், சுழல் நிதியாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.
உடுமலை:

தமிழக அரசு கிராமப்புற பெண்கள் பொருளாதார மேம்பாட்டிற்காக பண்ணை மகளிர் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத்துறை சார்பில் சில ஆண்டுகளுக்கு முன் பண்ணை மகளிர் குழு அமைக்க உத்தரவிட்டது. அதன்படி குடிமங்கலம், உடுமலை ஒன்றியங்களில்  30 பெண்கள் அடங்கிய குழுக்கள் ஏற்படுத்தப்பட்டது.

இக்குழுவினருக்கு முதற்கட்டமாக வங்கிக்கணக்கு தொடங்கியதும், சுழல் நிதியாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். குழுவினர் தங்கள் கிராமப்பகுதியில் வேளாண்மை சார்ந்த தொழில்களை மேற்கொள்ள  திட்டம் தயாரித்து அதற்கான மதிப்பீட்டை தோட்டக்கலைத்துறையில் ஒப்படைக்க வேண்டும்.

துறை வாயிலாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் குழுக்களுக்கு வங்கிக்கடன் வழங்க பரிந்துரைக்கப்படும். சோலார் கொப்பரை உலர் கலன் அமைத்தல் உட்பட பல்வேறு தொழில்களை குழுவினர்  தொடங்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இக்குழுக்களின் செயல்பாடுகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. எத்தகைய தொழில்  தொடங்குவது, அதை கொண்டு நிரந்தர வருவாய் பெறுவது போன்ற வழிகாட்டுதல் இல்லாமல் இக்குழுவினர் திணறுகின்றனர். வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் வேளாண் பொருட்களில் மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்புக்கு உள்ள வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

மேலும் கிராமங்களில் தோட்டக்கலைத்துறை வாயிலாக  சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். இதன் மூலம் பண்ணை மகளிர் குழுவினர் தொழில்துவங்குவதற்கான வாய்ப்புகளை அறிந்து கொண்டு திட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்ற முடியும். எனவே அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News