செய்திகள்
கொரோனா தடுப்பூசி

திருப்பத்தூர் மாவட்டத்தில் 500 வாக்குச்சாவடி மையங்களில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம்

Published On 2021-09-18 10:49 GMT   |   Update On 2021-09-18 10:49 GMT
நமது மாவட்டத்தில் 4 லட்சத்து 50 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது மாவட்டத்தில் உள்ள 45 சதவீதம் ஆகும்.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை 500 வாக்குச்சாவடி மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது எனவும் இதனை இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கலெக்டர் அமர்குஷ்வாஹா கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாவட்டத்தில் உள்ள 500 வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 7 மணி முதல் இரவு 7மணி வரை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த முகாம்களில் விவசாய பெருமக்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், அறக்கட்டளைகளை சேர்ந்தவர்கள், நிறுவனங்கள், வணிக நிறுவனங்களை சேர்ந்தவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கல்லூரி பயிலும் மாணவ-மாணவிகள் மற்றும் பொது மக்களும் பயன்படுத்தி கொண்டு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

நமது மாவட்டத்தில் 4 லட்சத்து 50 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது மாவட்டத்தில் உள்ள 45 சதவீதம் ஆகும்.

நமது மாவட்டத்தில் உள்ள மக்கள் 100 சதவிகிதம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். எனவே இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் தவறாமல் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி செலுத்திகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News