செய்திகள்
உதவியாளர்கள் நியமிக்க ரேசன் கடை பணியாளர்கள் வலியுறுத்தல்
பொருட்கள் எடை குறைந்து பிரச்சினை ஏற்படும் போது ரேஷன் விற்பனையாளருக்கு அபராதம் விதிக்கின்றனர்.
திருப்பூர்:
பணிக்கு தாமதமாக வரும் தொழிலாளர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க வேண்டும் என ரேசன் கடை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து திருப்பூரில் பணிபுரியும் ரேஷன் கடை பணியாளர்கள் சிலர் கூறியதாவது:-
பொருட்கள் எடை குறைந்து பிரச்சினை ஏற்படும் போது ரேஷன் விற்பனையாளருக்கு அபராதம் விதிக்கின்றனர். இந்நிலை மாற அனைத்து பொருட்களும், ‘பேக்கிங்’ முறையில் வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாதமும் சரியான நேரத்தில் சம்பளம் வழங்க வேண்டும்.
திருப்பூரில் ‘ஸ்மார்ட் சிட்டி’ பணிகளால் ரோடு சீரமைப்பு பணி நடந்து வருவதாலும், தொலைவில் இருந்து வருவதாலும் கடைக்கு வருவதில் தாமதம் ஏற்படுகிறது. சற்று தாமதமாக வரும் அப்பாவி தொழிலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
பல துறை அதிகாரிகளுக்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால் ரேஷன் பணியாளரை மனித நேயத்துடன் நடத்த வேண்டும். அதிக கார்டு உள்ள கடைகளில் உதவியாளரை தினக்கூலி அடிப்படையில் நியமிக்க கூட்டுறவு பதிவாளர் அனுமதி வழங்கியுள்ளார். இருப்பினும் தாமதம் செய்து வருகின்றனர்.
எனவே உதவியாளரை நியமித்து தினக்கூலி வழங்க வேண்டும். வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு நடத்தி மாவட்ட நிர்வாகம் தகுந்த தீர்வு வழங்க வேண்டும் என்றார்.