செய்திகள்
மடத்துக்குளத்தில் விவசாயிகளுக்கு சான்று வழங்கும் முகாம் - நாளை நடக்கிறது
திருப்பூர் மாவட்டத்தில் 5 ஏக்கருக்கும் குறைவாக உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு சான்று வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மடத்துக்குளம்:
சிறு, குறு விவசாயி சான்று பெற மடத்துக்குளம் தாலுகா தோட்டக்கலை உதவி இயக்குனர் திவ்யா விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய, மாநில அரசுகள் நுண்ணீர் பாசன திட்டத்திற்கு பல்வேறு மானியங்களை வழங்கி வருகிறது. அதில் சிறு, குறு விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்ற 100 சதவீதம் மானியமும் அடங்கும்.
திருப்பூர் மாவட்டத்தில் 5 ஏக்கருக்கும் குறைவாக உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு சான்று வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி துங்காவி கிராமத்தில் நாளை 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
அப்போது வருவாய்த்துறை மூலமாக உடனடியாக சிறு, குறு விவசாயிகளுக்கு சான்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகள் சிட்டா, அடங்கல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 2, நில உரிமைச் சான்று, பத்திர நகல், ஆதார், மற்றும் குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் சிறப்பு முகாமிற்கு வந்து சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம் என்று தோட்டக்கலை உதவி இயக்குனர் திவ்யா தெரிவித்துள்ளார்.