செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2021-09-16 03:55 GMT   |   Update On 2021-09-16 03:55 GMT
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது.
மேட்டூர்:

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அந்த அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக கர்நாடக அணைகளில் இருந்து விநாடிக்கு 13 ஆயிரம் கன அடி உபரிநீர் காவிரியில் திறந்து விடப்பட்டு வந்தது. நேற்று முதல் 2 அணைகளில் இருந்தும் 22 ஆயிரத்து 900 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

ஒகேனக்கல்லில் கடந்த சில நாட்களாக 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் இன்று 12 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது. இதனால் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து வருகிறார்கள்.

மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 9 ஆயிரத்து 750 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 11 ஆயிரத்து 521 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் 16 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 750 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று 74.69 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 74.18 அடியானது. இனி வரும் நாட்களில் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கூடுதலாக வரும் போது மேட்டூர் அணை நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.
Tags:    

Similar News