செய்திகள்
முக ஸ்டாலின்

கொடநாடு வழக்கில் உண்மை குற்றவாளிகள் தப்ப முடியாது- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Published On 2021-09-13 08:36 GMT   |   Update On 2021-09-13 08:36 GMT
கொடநாடு வழக்கை பொறுத்தவரையில் வழக்கு விசாரணை உரிய முறையில் நடைபெற்று வருகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை:

தமிழக சட்டசபையில் காவல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர்  பேசியதாவது:

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஜெ.ஜெ. நகரில் அம்மா உணவகம் தாக்கப்பட்டது, சென்னையில் பெண் போலீசிடம் தகராறில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை, தாழ்த்தப்பட்டோர் பற்றி தரக்குறைவாக பேசிய நடிகை மீது நடவடிக்கை என காவல் துறை எடுத்த துரித நடவடிக்கை பற்றி சொல்லிக்கொண்டே செல்லலாம். இப்படி தி.மு.க. ஆட்சியில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி இருக்கிறோம்.

ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் காலதாமதமாகவே கைது செய்யப்பட்டனர். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் குற்றவாளிகள் நீண்ட நாட்களுக்கு பிறகே கைதானார்கள்.

கொடநாடு விவகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும்போது, சட்டசபையில் அதனை எப்படி விவாதிக்க முடியும்? என்று எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.

ஆனால் சட்டசபையில் அதுபற்றி முதலில் பேசியது அவர்தான். கடந்த 18-ந் தேதி அதுதொடர்பாக பேட்டி அளித்தபோது, எதிர்க்கட்சி தலைவரான எனக்கே பாதுகாப்பு இல்லை என்று கூறினீர்கள். கவர்னரை சந்தித்தும் மனு அளித்தீர்கள்.

கொடநாடு வழக்கை பொறுத்தவரையில் வழக்கு விசாரணை உரிய முறையில் நடைபெற்று வருகிறது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உண்மை குற்றவாளிகள் தப்ப முடியாது. தமிழக காவல் துறையின் நலன் காப்பதில் அரசு உறுதியுடன் செயல்படுகிறது. பாரபட்சமின்றி பொதுமக்கள் அளிக்கும் பல்வேறு புகார்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.


Tags:    

Similar News