செய்திகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் திருவிழா, அரசியல், சமூகம், மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு தடை நீட்டிப்பு

Published On 2021-09-09 15:05 GMT   |   Update On 2021-09-09 15:05 GMT
தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. பாதிப்பு நிலவரங்களுக்கு ஏற்ப, ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. 

அவ்வகையில், கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கவும், கட்டுப்பாடுகளை நீட்டிக்கவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். தற்போதுள்ள கொரோனா நிலவரம், பள்ளிக்கூடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், விநாயகர் சதுர்த்தி விழா உள்ளிட்ட முக்கிய பண்டிகை காலங்கள் வருவதாலும், 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதாலும் கொரோனாவை மேலும் கட்டுப்படுத்த தடுப்பூசியை அதிகளவுக்கு போடுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்வது குறித்தும் இந்த கூட்டத்தில் பேசப்பட்டது.

மத்திய அரசு இந்த மாதம் 30-ந்தேதி வரை கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி உள்ள நிலையில் தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் தடுப்பிற்கான கட்டுப்பாடுகள் 15-ந்தேதி வரை உள்ளது. இந்த கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 

இந்நிலையில், தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் திருவிழா, அரசியல், சமூகம், மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அக்டோபர் 31ம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். 

பொது போக்குவரத்தினை அவசியத்திற்காக மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். பள்ளி, கல்லூரி வளாகங்களில் நோய் தடுப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
Tags:    

Similar News