செய்திகள்
கொள்ளை

சிங்காநல்லூரில் வீட்டின் கதவை திறந்து நகை, பணம் கொள்ளை

Published On 2021-09-09 10:39 GMT   |   Update On 2021-09-09 10:39 GMT
சிங்காநல்லூரில் வீட்டின் கதவை திறந்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்காநல்லூர்:

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள காமாட்சிபுரம் ராயப்பர் வீதியை சேர்ந்தவர் செல்வராஜ்.

இவரது மகள் சந்தியா (வயது 20). இவர் நவ இந்தியாவில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.

இவர் நேற்று காலை 11 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு சாவியை வீட்டின் முன்பு உள்ள ஜன்னலில் மறைத்து வைத்து விட்டு தனது பாட்டியுடன் அருகே உள்ள வங்கிக்கு பணம் எடுப்பதற்காக சென்றார். இதனை மர்மநபர்கள் சிலர் அங்கேயே நின்று நோட்டமிட்டு கொண்டிருந்தனர்.

அவர்கள் சென்றதும் உடனடியாக ஜன்னல் பகுதியில் மறைத்து வைத்திருந்த சாவியை எடுத்து வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றனர்.

பின்னர் வீட்டின் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 2 பவுன் தங்க காசு, 1 பவுன் கம்மல், ரூ 30 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் வெறும் அரைமணி நேரத்தில் நடந்துள்ளது.

வெளியில் சென்ற சந்தியா 11.30 மணிக்கு வீட்டுக்கு வந்தார். அப்போது கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியான அவர் உள்ளே சென்று பார்த்தபோது நகை மற்றும் பணம் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.

இது குறித்து அவர் சிங்காநல்லூர் போலீசில் புகார் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News