செய்திகள்
வீட்டில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க தடை
சாந்தோம் முதல் நேப்பியார் வரையிலான கடற்கரை பகுதியில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்கு அனுமதி இல்லை.
சென்னை:
கொரோனாவால் கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் சிலைகள் வைப்பதற்கும், ஊர்வலம் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி சிலைகள் வைக்கப்படும் என்று இந்து அமைப்புகள் அறிவித்துள்ளன.
இந்தநிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று இந்து அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூடுதல் போலீஸ் கமிஷனர்கள் டாக்டர் கண்ணன், செந்தில்குமார், பிரதீப்குமார் (போக்குவரத்து) ஆகியோர் இந்து அமைப்பு பிரதிநிதிகளிடம் பேசினார்கள்.
அப்போது அவர்கள், ‘கொரோனா பரவலை கருத்தில் கொண்டு சமூக அக்கறையுடன் தமிழக அரசு விடுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டனர். மேலும் அவர்கள் கூறுகையில், ‘சாந்தோம் முதல் நேப்பியார் வரையிலான கடற்கரை பகுதியில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்கு அனுமதி இல்லை. வீட்டில் வைத்து வழிபடும் சிலைகளுக்கும் இந்த கட்டுப்பாடு பொருந்தும். எனவே வீட்டின் அருகில் உள்ள நீர்நிலைகளில் சிலைகளை கரைத்து கொள்ளலாம்’ என்றும் தெரிவித்தனர்.