மனைவியுடன் தகராறு - திருமணம் ஆன 6 மாதத்தில் புது மாப்பிள்ளை தற்கொலை
கோவை:
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் குந்தன்குமார் (வயது 26). கட்டிட தொழிலாளி. கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோவைக்கு வந்த இவர் உக்கடம் வாலாங்குளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் பணியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
குந்தன்குமாருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. பின்னர் கோவை வந்த இவர் பணியில் ஈடுபட்டு வந்தார்.இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு செல்போனில் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவர் தனது சகோதரரிடம் தெரிவித்து இருந்தார். இதன் காரணமாக மனவேதனை அடைந்த குந்தன்குமார் 3 நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்தார்.
சம்பவத்தன்று அறையில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த சக தொழிலாளர்கள் இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட குந்தன்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.