செய்திகள்
சத்துணவு பொருட்களை மாணவர்களின் பெற்றோர்களுக்கு சத்துணவு ஊழியர் வழங்கியபோது எடுத்த படம்.

சத்துணவு ஊழியர்கள் ஓய்வு வயது 60 ஆக அதிகரிப்பு- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Published On 2021-09-07 07:34 GMT   |   Update On 2021-09-07 09:44 GMT
அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளதால், ஆசிரியர் மாணவர் விகிதாச்சார தேவைக்கேற்ப, ஆசிரியர் பணி நியமனம் மேற்கொள்ளப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை:

சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 110-வது விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அவர் பேசியதாவது:-

சத்துணவு மையங்களில் பணிபுரியும் சத்துணவுச் சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள் ஆகியோரின் ஓய்வுபெறும் வயது 58-ல் இருந்து 60ஆக உயர்த்தப்படும். இதன்மூலம் தற்போது பணியிலிருக்கும் 29 ஆயிரத்து 137 சமையலர்களும், 24 ஆயிரத்து 576 சமையல் உதவியாளர்களும் பயன்பெறுவார்கள்.

அரசுப் பணியாளர்கள் தங்கள் பணிக்காலத்தில் பெற்றிடும் கூடுதல் கல்வித் தகுதிகளுக்கான ஊக்க ஊதிய உயர்வு 2020-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. அரசுப் பணியாளர்கள் பெற்றிடும் கூடுதல் கல்வித் தகுதியின்மூலம் அவர்களுடைய பணித்திறன் மற்றும் அவர்களது செயல்பாடுகள் மேம்படுவதை ஊக்குவிக்கும் பொருட்டு, உயர் கல்வித் தகுதிகளுக்கான ஊக்கத்தொகை, ஒன்றிய அரசால் அண்மையில் அறிவித்துள்ள வழிகாட்டு முறைகளின் அடிப்படையில் விரைவில் அறிவிக்கப்படும்.

அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்கள், தேவைக்கேற்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நிரப்ப விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஓய்வுபெறும் நாளில் அரசுப் பணியாளர்கள் தற்காலிக பணிநீக்கத்தில் வைக்கும் நடைமுறை தவிர்க்கப்படும்.

2016, 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் முந்தைய அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டங்கள் தொடர்பாக, பல்வேறு சங்கங்கள் தங்கள் வேலைநிறுத்தக் காலம் மற்றும் தற்காலிகப் பணி நீக்கக் காலத்தினைப் பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டுமென கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

இதனைப் பரிவுடன் பரிசீலித்து, பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுடைய வேலைநிறுத்தக் காலம் மற்றும் தற்காலிகப் பணிநீக்க காலம் ஆகியவை பணிக்காலமாக முறைப்படுத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களை, அதே இடத்தில் மீண்டும் பணியமர்த்தும் வகையில், கலந்தாய்வின்போது அவர்களுக்கான உரிய முன்னுரிமை வழங்கப்படும். மேலும், போராட்டக்காலத்தில் அவர்கள்மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் கைவிடப்படும்.

அந்த ஒழுங்கு நடவடிக்கையின் காரணமாக பதவி உயர்வு ஏதேனும் பாதிக்கப்பட்டிருந்தால், அவையும் சரிசெய்யப்படும்.

பணியில் இருக்கும்போது காலமான அரசுப் பணியாளர்களின் வாரிசுதாரர்கள் கருணை அடிப்படையில் அரசுப் பணி பெறுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை நீக்கும் வகையிலும், கருணை அடிப்படையிலான நியமனங்கள் குறித்து தற்போது நடைமுறையில் உள்ள தெளிவின்மையினைச் சரிசெய்யும் வகையிலும் உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும்.

அரசுப் பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அரசு ஊழியர்களைச் சார்ந்து வாழும் மகன்கள் மற்றும் மகள்கள் ஆகியோரை அவர்களது வயது வரம்பினைக் கருத்தில் கொள்ளாமல் இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் வகையில் ஆணைகள் பிறப்பிக்கப்படும்.

மேலும், அரசு ஊழியர்கள் இத்திட்டத்தின்கீழ் இடர்பாடுகள் எதுவுமின்றி பயன்பெற ஏதுவாக, அவர்களுக்கு உதவிடும் வகையில் ஒருங்கிணைந்தத் தனி தொலைபேசி உதவி மையம் ஒன்று அமைக்கப்படும்.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அரசு ஊழியர் சங்கங்களால் கொரோனாவுக்கான சிகிச்சைகளை உயர்சிகிச்சைப் பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைகளைப் பொறுத்தவரையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள சிகிச்சை தொகையான ரூ.10 லட்சம் கூடுதலாக, கொரோனா சிகிச்சைக்கான செலவுத்தொகை அரசு நிதி உதவியின்கீழ் அனுமதிக்கப்படும்.

கணக்கு மற்றும் கருவூலத் துறையின் பணிகளை எளிதாக மேற்கொள்ளும் பொருட்டு, அவற்றைத் துரிதமாகவும், எளிதாகவும் செயல்படுத்தக்கூடிய வகையில், மாவட்டந்தோறும் பணியாளர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும்.

புதியதாக அரசுப் பணியில் சேரும் அரசுப் பணியாளர்கள் மற்றும் பதவி உயர்வு பெறும் பணியாளர்களுக்கு, பணி தொடர்பான பயிற்சியினை அந்தந்த மாவட்டங்களிலேயே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் தொலைதூரம் சென்று பயிற்சி பெறும் நிலை தவிர்க்கப்பட்டு, தாமதமின்றி அரசு ஊழியர்கள் உரிய காலத்தில் தங்களுக்குரிய தகுதிகாண் பருவம் முடித்தல் மற்றும் பதவி உயர்வு பெறுவது உறுதி செய்யப்படும்.



அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளதால், ஆசிரியர் மாணவர் விகிதாச்சார தேவைக்கேற்ப, ஆசிரியர் பணி நியமனம் மேற்கொள்ளப்படும்.

மக்களாட்சித் தத்துவத்தின் நான்கு தூண்களில் ஒன்றான நிர்வாகத்தின் அடித்தளமாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள். அவர்களது நலனில் எப்போதுமே அக்கறை கொண்டு அவர்களது நியாயமான கோரிக்கைகளை இந்த அரசு படிப்படியாக, நிச்சயமாக, உறுதியாக நிறைவேற்றும் என்று தெரிவித்து அமைகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.


Tags:    

Similar News