செய்திகள்
திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள்

மத்திய அரசை கண்டித்து செப். 20-ம் தேதி ஆர்ப்பாட்டம் - திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் அறிவிப்பு

Published On 2021-09-05 18:20 GMT   |   Update On 2021-09-05 18:20 GMT
காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்ற காணொளி கூட்டம் கடந்த மாதம் 20-ம் தேதி நடைபெற்றது.
சென்னை:

மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து செப்.டம்பர் 20 -ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: 

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் கடந்த 20-ம் தேதி இந்திய அளவிலான எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்ற காணொளி கூட்டத்தில் வேளாண் சட்டங்கள், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு, பொருளாதார சீரழிவு, தனியார்மயமாக்கல், வேலை இல்லாத் திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, பெகாசஸ் ஒட்டுக்கேட்பு உள்ளிட்ட மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத ஜனநாயக - விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து நாடு முழுவதும் செப்டம்பர் 20 முதல் 30-ம் தேதி வரை பல்வேறு போராட்டங்களை நடத்துவது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, மத்திய பா.ஜ.க. அரசின் செயல்களைக் கண்டித்து தி.மு.க. தலைமையிலான அனைத்து கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் மாநிலம் முழுவதும் வரும் 20-ம் தேதி காலை 10 மணிக்கு தங்களின் இல்லம் முன்பு கருப்புக் கொடி ஏந்தி கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டிட வேண்டும் என்றும், ஒருங்கிணைந்து போராடுவோம், மதசார்பற்ற - ஜனநாயக இந்தியக் குடியரசைப் பாதுகாப்போம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags:    

Similar News