செய்திகள்
சூரியகுமார்.

தாராபுரம் அருகே என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் மர்மச்சாவு

Published On 2021-09-03 10:22 GMT   |   Update On 2021-09-03 10:22 GMT
அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றின் அருகே சூரியகுமாரின் செருப்பு கிடந்ததை கண்டு மீனாட்சி அதிர்ச்சியடைந்தார். இதைத்தொடர்ந்து தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தாராபுரம்:

திண்டுக்கல் மாவட்டம் பழனி மேல்கரை பட்டியைச் சேர்ந்த வேலுச்சாமி மகன் சூரியகுமார் (வயது21). இவர் கரூர் அருகே உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தார். 

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் காரணமாக கடந்த ஓராண்டு காலமாக கல்லூரி திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சூரியகுமார் 4-ம் ஆண்டு என்ஜினீயரிங் படிப்பை ஆன்லைன் மூலம் படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தாராபுரம் அருகே கொண்டரசம்பாளையத்தில் உள்ள அவரது அத்தை மீனாட்சி வீட்டிற்கு வந்திருந்தார். பின்னர் திடீரென்று சூரியகுமாரை காணவில்லை. இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. 

இந்தநிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றின் அருகே சூரியகுமாரின் செருப்பு கிடந்ததை கண்டு மீனாட்சி அதிர்ச்சியடைந்தார். இதைத்தொடர்ந்து தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் தீயணைப்பு துறையின் நிலைய அலுவலர் ஜெயச்சந்திரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி ஒரு மணி நேரம் போராடி சூரியகுமார் உடலை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். 

இதுகுறித்து தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News