செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பொது சொத்துக்கள் தனியார்மயம்- மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு

Published On 2021-09-02 08:52 GMT   |   Update On 2021-09-02 10:03 GMT
மக்கள் நலன் கருதி இயங்கி வரக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களை விற்பதோ, குத்தகைக்கு விடுவதோ தேச நலனுக்கு உகந்தது அல்ல என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை:

காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை சட்டசபையில் இன்று பொதுத்துறை சொத்துக்களை மத்திய அரசு தனியார்மயமாக்கும் நடவடிக்கை தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார்.

இதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்து பேசினார். அப்போது முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு விளக்கம் அளித்தார்.

பொதுத்துறை நிறுவனங்கள் பிரச்சனை குறித்த நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்கள் உரையாற்றி, அதற்கு தொழில் துறை அமைச்சர் விளக்கம் தந்திருக்கிறார். எனவே, நானும் அதுகுறித்து ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.

நம் நாட்டினுடைய பொதுத்துறை நிறுவனங்கள், நம் அனைவருடைய பொதுச்சொத்தாகும். நமது நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பிற்கும் சிறு குறு தொழில்களின் ஆணிவேராக விளங்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கக்கூடிய பெருந்தொழில் நிறுவனங்கள் அவை என்பது எல்லோருக்கும் தெரியும்.

லாப நோக்கம் மட்டுமே குறிக்கோளாக இல்லாமல், மக்கள் நலன் கருதி இயங்கி வரக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களை விற்பதோ, குத்தகைக்கு விடுவதோ தேச நலனுக்கு உகந்தது அல்ல என்பது நம்முடைய கருத்து.



எனவே, மத்திய அரசினுடைய பொதுச்சொத்துக்களைத் தனியார்மயமாக்கும் போக்கினை எதிர்க்கக்கூடிய வகையிலே, பிரதமருக்கு நான் இதைச் சுட்டிக்காட்டி, நம்முடைய எதிர்ப்பைத் தெரிவிக்கக்கூடிய வகையில் கடிதம் எழுதவிருக்கிறேன் என்பதை இந்த அவைக்கு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அப்போது உறுப்பினர்கள் மேஜையை தட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர்.


Tags:    

Similar News