செய்திகள்
பலாத்காரம்

கிணறு தோண்ட பூதம் கிளம்பிய கதை... குட்கா விசாரணையில் வியாபாரியின் செல்போனில் சிக்கிய பலாத்கார வீடியோக்கள்

Published On 2021-08-30 16:12 GMT   |   Update On 2021-08-30 16:12 GMT
பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் அத்துமீறல்கள் பற்றி உரிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை:

சென்னை டி.பி.சத்திரத்தில் மளிகைக்கடை நடத்தி வந்தவர் பெருமாள் (வயது 48).  இவரது கடைக்கு அந்த பகுதியை சேர்ந்த லலிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 30 வயது பெண் அடிக்கடி மளிகைப் பொருட்கள் வாங்குவதற்கு வருவார். அப்போது பெருமாளுக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டது.

கடந்த 2014-ம் ஆண்டு முதல் பெருமாளும், லலிதாவும் பழகி வந்தனர். லலிதா மீது உள்ள மோகத்தால் அவருக்கு பெருமாள் தனது கடையில் இருந்து மளிகைப் பொருட்கள் உள்பட தேவையான அனைத்து பொருட்களையும் இலவசமாக கொடுத்து வந்தார்.

இந்த நிலையில் லலிதாவின் தங்கை சுந்தரியிடமும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பெருமாளுக்கு பழக்கம் ஏற்பட்டது. சுந்தரியிடமும் அவர் உறவு வைத்திருந்ததாக தெரிகிறது. ஓசியில் மளிகைப் பொருட்கள் கிடைக்கிறது என்பதால் அக்கா-தங்கை இருவரும் பெருமாளிடம் தங்களை பறிகொடுத்து இருந்தனர்.

லலிதா-சுந்தரி இருவருக்கும் தலா ஒரு மகள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்புதான் அவர்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் இருவரையும் பெருமாளின் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வரும்படி லலிதாவும், சுந்தரியும் அடிக்கடி அனுப்பி வைப்பது வழக்கம்.



அந்த சிறுமிகளை பார்த்ததும் பெருமாளுக்கு அவர்கள் மீதும் மோகம் ஏற்பட்டது. தனது ஆசையை லலிதாவிடம் பெருமாள் தெரிவித்தார். இதைக் கேட்டதும் பெருமாளிடம் இருந்து மளிகைப் பொருட்கள் மட்டுமின்றி பணத்தை கறக்கவும் லலிதா முடிவு செய்தார்.

தனது ஒரே மகளை காமவெறிப் பிடித்த பெருமாளுக்கு தாரை வார்க்க லலிதா முன்வந்தார். பெருமாளை தனது வீட்டுக்கே வரவழைத்தார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பெருமாள் அடிக்கடி லலிதா வீட்டுக்கு சென்று அவரது மகளிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டார்.

அப்படி பெருமாள் சென்று வந்த ஒவ்வொரு தடவையும் அவரிடம் இருந்து ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை லலிதா வாங்கிக்கொண்டதாக தெரிகிறது. பெருமாள் தனக்கு தேவைப்படும் நேரங்களில் எல்லாம் இப்படி லலிதாவின் வீட்டுக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் லலிதாவின் தங்கை சுந்தரிக்கு இந்த வி‌ஷயம் தெரியவந்தது. அவருக்கும் பெருமாளிடம் இருந்து பணம் பறிக்க வேண்டும் என்று விபரீத எண்ணம் உண்டானது. அவரும் தனது ஒரே மகளை பெருமாளுக்கு தாரை வார்த்து விட்டதாக கூறப்படுகிறது.

லலிதா-சுந்தரியின் ஏழ்மை சூழ்நிலைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பெருமாள் சுந்தரியின் மகளையும் வேட்டையாடினார். கடந்த ஓராண்டுக்கு மேலாக இந்த பாலியல் பலாத்கார கொடுமை நடந்து வந்தது.



இந்த நிலையில் வியாபாரி பெருமாள் மிகவும் ரகசியமாக குட்கா விற்பனை செய்வதாக டி.பி.சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு நேற்று முன்தினம் ஒரு தகவல் வந்தது. உடனே டி.பி.சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையில் போலீஸ் படை ஒன்று பெருமாள் கடைக்கு சென்றது. அவரது கடையில் தீவிர சோதனை நடத்தினார்கள்.

அப்போது பெருமாளின் கடைக்குள் குட்கா பாக்கெட்டுகள் அதிகளவில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், “இந்த குட்கா பாக்கெட்டுகளை எங்கிருந்து வாங்கினீர்கள்?” என்று கேட்டனர்.

ஆனால் பெருமாள் அதற்கு சரியான பதில் சொல்லவில்லை. குட்கா சப்ளை செய்தவர்களை காட்டிக் கொடுக்காமல் தப்பிக்க நினைத்தார்.

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி புதிய நடவடிக்கையில் ஈடுபட்டார். பெருமாளின் செல்போனை வாங்கி ஆய்வு செய்தால், நிச்சயமாக அதில் குட்கா சப்ளை செய்த கும்பலின் தொடர்பு எண்கள் கிடைக்கும் என்று முடிவு செய்தார். எனவே அவர் பெருமாளிடம் செல்போனை கொடுக்கும்படி கேட்டார்.

ஆனால் பெருமாள் தனது செல்போனை கொடுக்க மறுத்து அடம்பிடித்தார். உடனே பெருமாளிடம் விசாரிக்க வேண்டிய முறையில் விசாரணை நடந்தது. இதனால் பெருமாள் தனது செல்போனை எடுத்து இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியிடம் கொடுத்தார்.

பெருமாளின் செல்போனில் பேசியவர்கள் யார்- யார்? என்று இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி ஆய்வு செய்தார். மேலும் பெருமாளின் காண்டாக்ட் லிஸ்டையும் ஆய்வு செய்தார். பிறகு கேலரி பகுதிக்கு சென்று குட்கா தொடர்பான தகவல்களை வைத்திருக்கிறாரா? என்று பார்த்தார்.

அப்போது பெருமாளின் செல்போனில் ஆபாச படங்கள் பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தகவல் தெரிவித்தார். கீழ்ப்பாக்கம் போலீஸ் துணை கமி‌ஷனர் கார்த்தி கேயன், உதவி கமி‌ஷனர் ரமேஷ் தலைமையில் போலீஸ் படையினர் நேற்று பெருமாளின் செல்போனை தீவிரமாக ஆய்வு செய்தனர்.

பெருமாளின் செல்போனுக்குள் சுமார் 50 ஆபாச வீடியோ பதிவுகள் இருந்தன. அதைக் கண்டதும் போலீஸ் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. குட்கா விற்கும் பெருமாளுக்கு ஆபாச படங்கள் பார்க்கும் பழக்கம் இருந்திருக்கலாம் என்று சாதாரணமாக நினைத்தனர்.

அந்த ஆபாச படங்கள் அனைத்தும் இணையத்தளத்தில் இருந்து பெருமாளே டவுன்லோடு செய்திருக்கலாம் என்றும் போலீசார் முதலில் நினைத்தனர். மளிகை வியாபாரிக்கு எப்படி இதற்கான நேரம் கிடைத்தது என்ற எண்ணத்தில் அந்த ஆபாச படங்களை போலீசார் ஒவ்வொன்றாக ஆய்வு செய்ய தொடங்கினார்கள்.

அப்போது போலீஸ் அதிகாரிகளுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி ஏற்பட்டது. 50 ஆபாச வீடியோ காட்சிகளிலும் பெருமாள்தான் இருந்தார். அவர் தனது கள்ளக்காதலியுடன் இருக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அது மட்டுமின்றி கள்ளக்காதலியின் மகள்களுடனும் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு இருக்கும் காட்சிகள் ஏராளமாக இருந்தன.

அந்த ஆபாச காட்சிகளை பார்த்ததும் போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டனர். வியாபாரி பெருமாள் சிறுமிகளிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டபோது அந்த காரியத்தை அவனே செல்போனில் படம் பிடித்து பதிவு செய்து வைத்து இருப்பது தெரியவந்தது. சில வீடியோ காட்சிகளில் சிறுமிகளை மிரட்டி பெருமாள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

அந்த 50 ஆபாச வீடியோக்களை போலீசார் நுணுக்கமாக ஆய்வு செய்தபோது லலிதா, சுந்தரியின் மகள்கள் தவிர மேலும் 3 சிறுமிகளிடம் பெருமாள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. அந்த 3 சிறுமிகள் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அந்த 3 சிறுமிகளும் லலிதா வீட்டிற்கு பக்கத்து வீடுகளில் வசிப்பவர்களின் குழந்தைகள் என்பது தெரியவந்தது. பெற்றோர்கள் இருவரும் வெளியில் வேலைக்கு சென்றுவிடும் நிலையில் தங்களது குழந்தைகளை லலிதாவிடம் ஒப்படைத்து பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படி விட்டு சென்றுள்ளனர்.

அந்த 3 குழந்தைகளைத் தான் லலிதா உதவியுடன் பெருமாள் தனது காம விளையாட்டு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளான். அந்த பெற்றோர்களுக்கு தெரியாமலேயே இந்த அட்டூழியம் கடந்த 6 மாதமாக நடந்து வந்துள்ளது.

பெருமாளின் காம களியாட்டத்தில் சூறையாடப்பட்ட சிறுமிகளுக்கு 4 முதல் 13 வயது வரை இருக்கும். பெருமாள் நடத்திய பாலியல் அத்துமீறல்கள் பற்றி அந்த சிறுமிகளுக்கு உரிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தங்களுக்கு நடக்கும் பாலியல் கொடுமைகள் பற்றி அந்த சிறுமிகள் ஏதும் அறியாத நிலையில் இருந்துள்ளனர். பெற்ற தாயே தனது மகளை தாரை வார்த்ததால் அந்த 5 சிறுமிகளையும் மிக எளிதாக பெருமாளால் பாலியல் பலாத்காரம் செய்ய முடிந்தது.

குட்கா வேட்டைக்கு போன இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி சந்தேகத்தின் பேரில் பெருமாளின் செல்போனை ஆய்வு செய்ததால் தான் இந்த பாலியல் பலாத்காரங்கள் அம்பலத்துக்கு வந்துள்ளன. இல்லையெனில் பெருமாள் மேலும் சிறுமிகளை வேட்டையாடி இருப்பார். அல்லது அந்த சிறுமிகளை நாசப்படுத்தி இருப்பார்.

கடந்த 7 ஆண்டுகளாக பெருமாள் நடத்தி வந்த காம களியாட்டம் அம்பலமானதால் அவர் அனைத்து உண்மைகளையும் ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர். அவரது பாலியல் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்த லலிதா-சுந்தரியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது போக்சோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வியாபாரி பெருமாள் செங்கல்பட்டு சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். லலிதாவும், சுந்தரியும் புழல் ஜெயிலில் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கீழ்ப்பாக்கம் துணை கமி‌ஷனர் கார்த்திகேயன் கூறுகையில், “இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மூலம்தான் இந்த மிகப்பெரிய குற்றச்செயல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பெருமாளின் செல்போனை ஆய்வு செய்யாவிட்டால் அவன் சிக்கி இருக்க மாட்டான். குற்றவாளிகள் மீது உரிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்றார்.

சென்னையில் மேலும் பல பகுதிகளில் சிறுமிகளுக்கு இத்தகைய பாலியல் பலாத்காரங்கள் நடப்பதாக அடிக்கடி புகார்கள் வருகின்றன. குழந்தைகள் நல குழுக்களிடம் இருந்து புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன.

சிறுமிகள் பாதிக்கப்படும் பட்சத்தில் இது தொடர்பாக 1098 என்ற இலவச உதவி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.
Tags:    

Similar News