செய்திகள்
விபத்தில் சேதமான கார்

கள்ளக்குறிச்சி அருகே சோகம் - அரசு பஸ், கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி

Published On 2021-08-29 22:05 GMT   |   Update On 2021-08-29 22:05 GMT
கள்ளக்குறிச்சி அருகே தியாகதுருகத்தில் அரசு பஸ் மற்றும் கார் மோதிய விபத்தில் சென்னையைச் சேர்ந்த 6 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
கள்ளக்குறிச்சி:

சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த எபினேசர் இமான்(28), இவான், ரபேக்கா, இவரது தாயார் உள்பட 6 பேர் ஒரு காரில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றனர். பின்னர் அங்கிருந்து மீண்டும் சென்னைக்கு புறப்பட்டனர். இவர்களது கார், கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் புறவழிச்சாலையில் நேற்று இரவு வந்து கொண்டிருந்தது.

அதேவேளையில், சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் ஒன்று சேலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. பஸ்சை அழகுராஜன்(40), என்பவர் ஓட்டினார்.

தியாகதுருகம் புறவழிச்சாலை பிரிதிவிமங்கலம் பஸ்நிறுத்தம் அருகே சுற்றுலா சென்று திரும்பியவர்கள் வந்த காரும், எதிரே வந்த அரசு பஸ்சும் கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதிக்கொண்டன.

இந்த கோர விபத்தில் பஸ்சின் முன்பக்க அடியில் கார் சிக்கிக்கொண்டது. இதனால் காரின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது. காரை சில அடி தூரத்துக்கு பஸ் இழுத்து சென்று சாலையோர பள்ளத்தில் இறங்கி நின்றது.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பஸ்சுக்கு அடியில் சிக்கிய காரை மீட்பு வாகனம் மூலம் மீட்டனர்.

இந்த விபத்தில் காரில் வந்த எபினேசர் இமான், இவான், ரபேக்கா, இவரது தாயார் உள்பட 6 பேர் இருக்கையில் அமர்ந்தபடியே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

இவர்களின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பஸ்சில் வந்த 5 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News