செய்திகள்
பணியிடை நீக்கம்

லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்

Published On 2021-08-28 10:23 GMT   |   Update On 2021-08-28 10:23 GMT
பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் ராஜூவை துறை ரீதியாக பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் கோட்டாட்சியர் ஹரிதாஸ் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த தைலாபுரத்தை சேர்ந்தவர் உத்திரகுமார். இவர் தனக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்திற்கு தனது தந்தை ஏழுமலையின் பெயரில் பட்டா மாற்றம் செய்து தரக்கோரி தைலாபுரம் கிராம நிர்வாக அலுவலர் ராஜூவை (வயது 59) அணுகினார். அதற்கு அவர் ரூ.20 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என கறாராக கூறியுள்ளார். இதுகுறித்து உத்திரகுமார், விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்ததன்பேரில் போலீசார் கூறிய அறிவுரைப்படி கடந்த 25-ந் தேதி ரசாயன பொடி தடவிய லஞ்சப்பணத்தை எடுத்துக்கொண்டு கிராம நிர்வாக அலுவலர் ராஜூவிடம் கொடுத்தார். அந்த பணத்தை ராஜூ வாங்கியபோது அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

மேலும் தைலாபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கிராம நிர்வாக அலுவலர் ராஜூவை துறை ரீதியாக பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து விழுப்புரம் கோட்டாட்சியர் ஹரிதாஸ் உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News