செய்திகள்
கமல்ஹாசன்

கட்சி நலனுக்காக எதையும் செய்ய தயங்க மாட்டேன்- கமல்ஹாசன் பேச்சு

Published On 2021-08-27 06:50 GMT   |   Update On 2021-08-27 07:47 GMT
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டும் என்பதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உறுதியாக உள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் விடுபட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு செப்டம்பர் 15-ந் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையமும் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தநிலையில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக சென்னையில் நேற்று கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மண்டல செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உட்பட 25-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் கலந்துகொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டும் என்பதில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உறுதியாக உள்ளார். நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மண்டல செயலாளர்கள்(கட்டமைப்பு) மற்றும் மாநில செயலாளர்கள்(அணிகள்) ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில், கட்சி கட்டமைப்பு ரீதியாக தற்போதுள்ள நிலை, தற்போதைய சூழலில் உள்ளாட்சி தேர்தலில் எதிர்கொள்வதால் ஏற்படக்கூடிய சாதக, பாதக அம்சங்கள், வெற்றிகரமாக எதிர்கொள்ள கட்டமைப்பு ரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டது.

நம் கட்சியை நகர்ப்புறத்துக் கட்சி என்று சிலர் முத்திரை குத்தப்பார்க்கிறார்கள். அதை பொய்யாக்கும் வகையில் கிராமங்களிலும் நமது வலிமையை நிரூபிக்கும் வகையில் உள்ளாட்சித் தேர்தலை நாம் எதிர்கொள்ள வேண்டும்.


அதில் ஏற்படக்கூடிய சாதக, பாதக அம்சங்கள் குறித்து கருத்து சொல்லுங்கள் என்றார். நாங்கள் எங்கள் கருத்துகளை சொன்னோம். பலரது ஆலோசனைக்குப் பின் இறுதியில் பேசிய கமல் கூறியதாவது:-

இது உருமாறிய மக்கள் நீதி மய்யம் கட்சியாக இருக்கிறது. இது வார்த்தையாக இருக்ககூடாது. நம்முடைய நோக்கம், கொள்கையில் எந்த நழுவலும் இருக்கக்கூடாது. என்னால் முடியாத எதையும் உங்களைச் செய்யச் சொல்ல மாட்டேன்.

என்னால் முடியும் என்பதை மட்டும் தான் உங்களைச் செய்யச் சொல்வேன். எனக்கு கட்சிக்காக சாணி அள்ளுவது என்பது அவமானம் கிடையாது. நம்முடைய கட்சி கூட்டம் நடைபெறும் இடத்தில் ஒரு மாடு சாணி போட்டிருந்தால் நான் எடுத்துவிடுவேன்.

சுத்தம் செய்ய வேண்டும் என்றால் நான் சுத்தம் செய்வேன். அதனை இன்னொருவரிடம் சொல்லும் போது என்னை மட்டும் சொல்கிறார் என்று எண்ண வேண்டாம். நான் செய்வதை தான் உங்களை செய்யசொல்கிறேன் என்று ஒவ்வொரு தொண்டனும் நம்பவேண்டும். என்னால் இயலாததை எதையும் சொல்லமாட்டேன்.

கட்சி என்பது எனக்கு குடும்பம் தான். எனவே, என் குடும்பத்தில் இருந்து யாரை தவறாக பேசினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன். ஏனென்றால், என் குடும்பத்தில் இருக்கும் ஒருவரை பேசுவது என்னை பேசுவதற்கு சமமாகும்.

எனவே, அவர்களை நீக்குவது எனக்கு அவமானம் அல்ல. அவர்களுக்குத்தான் அவமானம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News