செய்திகள்
மொரப்பூர் அருகே 14 வயது மாணவிக்கு திருமணம் - தந்தை, கணவர் உள்பட 3 பேர் கைது
மொரப்பூர் அருகே 14 வயது மாணவிக்கு திருமணம் நடந்த சம்பவம் குறித்து தந்தை, கணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மொரப்பூர்:
மொரப்பூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி அரசு பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 22-ந்தேதி அந்த மாணவி வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதுகுறித்து சிறுமியின் தந்தை மொரப்பூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்தநிலையில் மாயமான சிறுமி மொரப்பூர் போலீசில் ஆஜரானார்.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தனக்கு 14 வயதே ஆகிறது. தனக்கும், 29 வயதுடைய வாலிபருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கட்டாய திருமணம் செய்து வைத்தனர். இந்த திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லாததால் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டதாக கூறினார். இதையடுத்து சிறுமிக்கு இளம்வயது திருமணம் செய்து வைத்த தந்தை, உறவினர் மற்றும் கணவர் ஆகிய 3 பேரையும் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.