ஒத்தக்கடையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட தாய்- மகன் உள்பட 3 பேர் கைது
மதுரை:
மதுரை ஒத்தக்கடையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து ஒத்தக்கடை போலீசார் காளிகாப்பான் பிரிவில் வாகன சோதனை நடத்தினர். அங்கு தாயும், மகனும் நடந்து வந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.
போலீசார் 2 பேரையும் ஒத்தக்கடை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அவர்கள் ஒத்தக்கடை மீனாட்சி காலனியை சேர்ந்த நாகராஜன் என்கிற ராஜா (25), அவரது தாயார் சாந்தி என்கிற சாந்தா (47) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 2 அடி நீள இரும்பு கம்பி பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் தாயும், மகனும் ஒத்தக்கடையில் பல்வேறு வீடுகளில் கொள்ளை அடித்ததை ஒப்புக் கொண்டனர்.
அவர்களுடன் ஒத்தக்கடையை சேர்ந்த கோபி கண்ணன் கூட்டாளியாக இருந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கேரள தங்க மாலை உள்பட 25 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
கைதான 3 பேரிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.