‘ஆன்லைன்’ தேர்வு முடிவுக்கு பயந்து 6-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
வில்லிவாக்கம்:
முகப்பேர் கிழக்கு, 10-வது பிளாக்கை சேர்ந்தவர் தர்மகன். இவரது மகன் பிரவின்(வயது11).முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். தர்மகனும், அவரது மனைவியும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்கள்.
மாணவன் பிரவினுக்கு ஆன்லைனில் வகுப்பு தேர்வு நடந்து இருந்தது. இந்த தேர்வின் முடிவை நேற்று தெரிவிப்பதாக ஆசிரியர்கள் கூறி இருந்தனர்.
இதனால் தேர்வு முடிவை நினைத்து மாணவன் பிரவின் அச்சத்தில் இருந்ததாக தெரிகிறது.
இதையடுத்து அவன் தனது பெற்றோரிடம் ஆன்லைன் தேர்வு ரிசல்ட் வருவதையடுத்து மாலையில் முன்கூட்டியே வேலை முடிந்து வீட்டுக்கு வரும்படி தெரிவித்து இருந்தான்.
இந்தநிலையில் தர்மகனும், அவரது மனைவியும் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது படுக்கை அறை உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. நீண்ட நேரம் தட்டியும் திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர்கள் கதவை உடைத்து பார்த்த போது அங்குள்ள மின் விசிறியில் பிரவின் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
ஆன்லைன் வகுப்பு தேர்வில் மதிப்பெண் குறைவாக வந்துவிடுமோ என்ற பயத்தில் மாணவன் பிரவீன் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று தெரிகிறது. இதுதொடர்பாக ஜெ.ஜெ.நகர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
ஐ.சி.எப். வடக்கு திருமலை நகர் பகுதியை சேர்ந்தவர் கெவின் (26). என்ஜீனியரான இவர் தரமணியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவர் இரவு பணியை முடித்துவிட்டு இன்று காலை 4 மணி அளவில் வீட்டிற்கு வந்தார்.
இந்த நிலையில் காலை 8 மணி அளவில் கெவின் திடீரென வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அருகில் அவர் எழுதி வைத்திருந்த கடிதம் இருந்தது. அதில், எனக்கு வாழ பிடிக்கவில்லை. அதன் காரணமாக தற்கொலை செய்து கொள்கிறேன் என்று எழுதி வைத்துள்ளார்.
இது குறித்து ஐ.சி.எப். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.