செய்திகள்
முக ஸ்டாலின்

ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

Published On 2021-08-05 23:37 GMT   |   Update On 2021-08-06 06:28 GMT
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து வருகின்றன.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று, கடந்த மே மாதம் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற சமயத்தில், தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தையும் தாண்டி பதிவாகி வந்தது. 

அதன்பின், தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மூலம் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் தளர்த்தப்பட்ட ஊரடங்கு வரும் 9-ம் தேதியுடன் முடிவடைகிறது. 
 
தற்போது வரை பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களை திறப்பதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. 

இந்நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், கட்டுப்பாடுகளை அதிகரிப்பது தொடர்பாகவும் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் சுகாதாரத் துறை அமைச்சர், சுகாதாரத் துறை செயலாளர், தலைமைச் செயலாளர் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் ஊரடங்கு தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News